tamilnadu

img

தமிழக நலனைக் காக்க தவறிய அதிமுக - அ.அன்வர் உசேன்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வலுவான குரல்கள் நாடெங்கும் எழுந்துள் ளன. இந்த எதிர்ப்பில் முன்னணியில் நிற்கும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். தமது மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் ஆழமான பற்று கொண்ட தமிழக மக்கள் மத ஒற்றுமை காப்பதிலும் வலுவாக நிற்பவர்கள். ஆகவே மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் தருவதில் ஆச்சர்யம் இல்லை. குடியுரிமை திருத்த சட்டமும் தேசிய மக்கள் பதிவேடும் இணைந்தால் அது பாசிசத்தின் அடுத்த நகர்வு என்பதை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள் ளனர். இன்னொரு முக்கிய காரணத்தால் இந்த சட்டம் தமிழ கத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமிழகத்தில் பல முகாம்களில் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். வேறு சில மாநிலங்களிலும் தமிழ் அகதிகள் உள்ளனர். இந்த சட்டம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க தவறு கிறது. எனவே தமிழக மக்களும் அனைத்து அரசியல் கட்சி களும் இந்த சட்ட வரைவை எதிர்த்து போராட வேண்டிய தேவை உள்ளது.

பாஜகவின் வெற்றிக்கு  வழிவகுத்த அதிமுக

மக்களவையில் உள்ள அ.தி.மு.க.வின் ஒரே உறுப்பி னர் ரவீந்திரநாத் இந்த சட்டத்தை ஆதரித்து கை உயர்த்தி யுள்ளார். இதில் ஆச்சர்யம் இல்லை. பல சமயங்களில் இவர் அ.தி.மு.க. உறுப்பினரா அல்லது பா.ஜ.க. உறுப்பி னரா என வேறுபடுத்தி பார்க்க இயலாத அளவிற்கு இவரது செயல்கள் உள்ளன. இவரது நாடாளுமன்ற உரைகள் அனைத்தும் மோடி புகழ் பாடுவதாகவே உள்ளது. இவரது உரைகள் தமிழகத்தின் அரசியல் தப்பு தாளங்கள் எனில் தவறு அல்ல! மாநிலங்கள் அவையில் அ.தி.மு.க.விற்கு 11 உறுப்பி னர்கள் உள்ளனர். இந்த சட்டம் மாநிலங்கள் அவையில் 125 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 105 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையை ஆய்வு செய்தால் ஒரு உண்மை விளங்கும். அ.தி.மு.க.வின் 11 பேர் எதிர்த்து வாக்களித்து இருந்தால் வரைவு சட்டத்திற்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 116 வாக்குகளும் கிடைத்து இருக்கும். எனவே குடியுரிமை திருத்த வரைவு சட்டம் தோல்வி அடைந்து இருக்கும். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை தீர்மானிக்கும் இடத்தில் அ.தி.மு.க.இருந்தது. ஆனால் அ.தி.மு.க. என்ன செய்தது?

அநீதிகள் உண்டு;  ஆனாலும் ஆதரவு உண்டு

இந்த சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய அரசியல் சமூக தேவை அனைத்தும் அ.தி.மு.க.வுக்கு இருந்தது. இதனை மாநிலங்கள் அவையில் பேசிய அக்கட்சியின் உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்  எடுத்துரைத்தார். அவர் கூறினார்: “(இந்த வரைவு சட்டத்தில்) சில பிரிவினர் விடுபட்டி ருப்பது புதிராக உள்ளது. இலங்கையிலிருந்து தமிழ கத்திற்கு வந்து தங்கியுள்ள அகதிகள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்கின்றனர். இந்த தேசத்தின் குடிமக்கள் ஆவதற்கு அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. அவர்கள் விடுபட்டுள்ளனர்.”

“(தமிழக) மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது; தமிழர்கள் விடுபட்டுள்ளனர்” எனவும் அவர் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.  எஸ்.ஆர்.பி. மூத்த அரசியல்வாதி அல்லவா? 1971 போரில் என்ன நடந்தது என்பதை அவர் நினைவு கூர்கிறார்:

“பங்களா தேஷிலிருந்து ஒரு கோடி பேர் நமது நாட்டிற்கு வந்தனர். அந்த ஒரு கோடி பேருக்கு நாம் ஒரு ஆண்டு உணவும் ஏனைய வசதிகளும் அளித்தோம். அவர்க ளில் பெரும்பான்மையானவர்கள் பங்களாதேஷ் உரு வான பிறகு திரும்பி சென்றனர். ஆனால் ஒரு பிரிவினர் இங்கேயே தங்கினர். அவர்களில் இந்துக்களும் உண்டு; முஸ்லிம்களும்  உண்டு. அவர்கள் ஏன் விடுபட்டு போயினர் என்பதை இந்த அரசாங்கம் விளக்குமா?” எனவும் நியாயமாக கேள்வி எழுப்பினார் எஸ்.ஆர்.பி.  எனினும் இவர் இறுதியில் கூறுகிறார்:

“எப்படியிருந்தாலும் நாங்கள் இந்த சட்டமுன் வரைவை ஆதரிக்கிறோம்.” ஏன் இந்த முரண்பாடு? வரைவு சட்டத்தில் உள்ள அநீதி களை பட்டியல் போட்டு சொல்லிவிட்டு பிறகு அதே அநீதிகளை ஆதரிப்போம் எனில் அது என்ன அரசியல் நிலைபாடு?

இந்த பிரச்சனையில் பேசிய மற்றொரு அ.தி.மு.க. உறுப்பினர் விஜிலா சத்யானந்த் இலங்கை அகதிகளுக்கு இரட்டை உரிமை வேண்டும் என மறைந்த ஜெயலலிதா என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்பதை பட்டியல் இடுகிறார். எனினும் இறுதியில் வரைவு சட்டத்தை ஆதரிக்கி றார். ஜெயலலிதாவின் பெயரை உச்சரித்து ஆட்சி நடத்து பவர்கள் அவரின் கருத்துகளுக்கு எதிராகவே செயல்படு கின்றனர்.

தமிழ்ச் சமூகத்தின் தேவையும் ஆள்வோரின் தேவையும்

தமது ஆதரவு இல்லை எனில் மோடி அரசாங்கம் மாநிலங்களவையில் தோற்கும் என அ.தி.மு.க.வுக்கு நன்றாக தெரியும். அப்படியிருந்தும் குறைந்தபட்சம் இலங்கை தமிழர்களுக்கு கூட குடியுரிமை வாங்க முயற்சி கள் செய்யப்படவில்லை. கடைசி நேரத்தில் மணிப்பூர் மாநிலத்திற்கு அமித்ஷா விலக்கு அளித்தது இங்கு குறிப்பி டத்தக்கது. ஒரு சிறிய மாநிலமான மணிப்பூர் தனது கோரிக்கையை பெற முடிகிறது எனில் ஏன் தமிழகத்தை ஆளும் கட்சி இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? சில வாரங்கள் முன்பு வரை பா.ஜ.க.வின் கூட்டாளி யாக இருந்த சிவசேனா மக்களவையில் ஆதரித்தாலும் மாநிலங்களைவையில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. கடந்த காலத்தில் பா.ஜ.க. ஆதரவு நிலை எடுத்த தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி எதிர்ப்பு நிலை எடுத்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. சரணாகதி நிலை எடுத்தது வரலாற்று பிழை எனில் மிகை அல்ல.

அமித்ஷா கொண்டு வந்த வரைவு சட்டத்தை எதிர்க்க வேண்டிய அனைத்து அரசியல் மற்றும் சமூக தேவைக ளும் நியாயங்களும் .அ.தி.மு.க.வுக்கு இருந்தன. எனினும் இந்த சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்தது. என்ன காரணம்? பா.ஜ.க.வின் தயவு இல்லை எனில் தமது ஊழல் ஆட்சி நீடிக்காது என்பது அ.தி.மு.க.வுக்கு தெரியும். இவர்க ளின் ஊழல் பட்டியலை தம் கையில் வைத்து கொண்டு பா.ஜ.க. இவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. தமது பதவிகளையும் கொள்ளையையும் பாதுகாப்பதுதான்  முக்கிய தேவையாக இருக்கிறது. இந்த தேவைகளை ஒப்பிடும் பொழுது தமிழ கத்தின் நலன்கள் அல்லது இலங்கை தமிழ் மக்களின் குடி யுரிமை ஆகியவை பெரிது அல்ல என்பதே அ.தி.மு.க.வின் நிலைபாடு. எனவேதான் மாநிலத்தின் மத ஒற்றுமை கொள்கைகளையும் இலங்கை தமிழர்களின் நலன்களை யும் உதறிவிட்டு இந்த வரைவு சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்துள்ளது.  இந்த அரசியல் சரணாகதிக்கு அ.தி.மு.க. மிகப்பெரிய விலையை தர வேண்டியிருக்கும் என்பதிலும் தமிழக மக்கள் சரியான அரசியல் பாடத்தை தருவார்கள் என்பதிலும் ஐய மில்லை.